அனைத்துலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு இன்று வடக்கு, கிழக்கில் போராட்டங்கள், பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு்ள்ளன. அனைத்துலக மனித உரிமைகள் நாளான இன்று யாழ்ப்பாணத்தில் அடையாள நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நல்லூர் ஆலய முன்றலிலிருந்து மனித உரிமையை பிரகடனப்படுத்தும் பதாகைகளை தாங்கியவாறு ஊர்வலகமாக துர்க்காதேவி மண்டபம் வரை இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.
அதன் பின்னர் யாழ். மனித உரிமைகள் முதலுதவிச் சங்கம் மற்றும் இலங்கை சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் மனித உரிமைகள் நாள் நிகழ்வும் இடம்பெற்றது.
அதேபோல வவுனியாவிலும் இன்று காணாமற்போனோரின் உறவுகளின் போராட்டம், இன்று பிற்பகல் 1 மணியளவில் குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் பேரணியாக குடியிருப்பு பாடசாலை வீதி வழியாக வைத்தியசாலை சந்திக்குச் சென்று தமது போராட்ட களத்தினை வந்தடைந்தனர்.
வடக்கு கிழக்கில் தமிழர் தீர்வு பற்றிய வாக்கெடுப்பு நடத்த ஜ.நா.வின் உதவியை நாடுவதாகவும், சனநாயகத்தை ஊக்குவிப்பதற்கான வாக்கெடுப்பு என்றும் பொறிக்கப்பட்ட பதாதையுடன் இன்றுடன் 658 நாட்களாக வவுனியாவில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டு வரும், கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் உறவுகள் இந்தப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் பெருமளவான தாய்மார்கள் கலந்து கொண்டதுடன், குடியிருப்பு பிள்ளையார் ஆலய வழிபாடுகளின் பின்னர் தேங்காய் உடைத்து வழிபட்டு பாடசாலை வீதிவழியாக வைத்தியசாலை சந்தி சென்று அங்கிருந்து தமது போராட்ட களத்திற்கு சென்றனர்.
இதேவேளை அம்பாறை திருக்கோவில் பிரதேசத்திலும், ‘எங்களது உறவுகள் எங்களுக்கு உயிருடன் வேண்டும்’ என்ற தொனிப்பொருளில் கவனஈர்ப்புப் ஆர்பாட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் அதன் சங்க காரியாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு மணிக்கூட்டுக் கோபுரத்தை சென்றடைந்தத போராட்டகாரர்கள் கவனஈர்ப்புப் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களின் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவிகள் உறுப்பினர்கள் என்று நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு, “அரசியல் கைதிகளை துரிதகதியில் விடுதலை செய்” – “பயங்கரவாத தடைச்சட்டம் தேவையா?” – “மக்களை பாதுகாப்பது அரசின் கடமை” – “அனைத்துலக நீதிப்பொறிமுறையே அவசியம்” என்று பல்வேறு வாக்கியங்களை ஏந்தியவாறு குரல் எழுப்பியவாறு கொட்டும் மழையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அதேபோல வடக்கில் உள்ள ஜந்து மாவட்டத்தினை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டுவரும் நிலையில், அனைத்துலக மனித உரிமைகள் நாளான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒன்று திரண்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.