பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டுள்ளமைக்கு காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வலியுறுத்தி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுத்த கோரிக்கையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த கோரிக்கை தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் நீண்டு ஆலோசனை நடாத்தியதன் பின்னரே இந்தியப் பிரதமர் அந்த இணக்கத்தை தெரிவித்துள்ளார்.
ஆனால் இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று அமைதி பேச்சுவார்த்தையைத் தொடர பிரதமர் நரேந்திர மோடி சம்மதம் தெரிவித்து இருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எல்லையில் பாகிஸ்தான் இராணுவத்தினர் அத்து மீறலில் ஈடுபடும் நிலையில், இந்தியப் பிரதமர் அமைதிப் பேச்சுக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக விமர்சித்துள்ள அந்த கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் மணீஷ்திவாரி , இந்த விடயத்தில் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தது யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரத்தில் இந்தியாவிடம் மன மாற்றம் ஏற்பட செய்த சக்தி எது என்பதை காங்கிரஸ் தெரிந்து கொள்ள விரும்புகிறது என்றும் மணீஷ்திவாரி மேலும் தெரிவித்துள்ளார்.