மன்னார் முள்ளிக்குளம் தமிழ் கிராமத்தை ஆக்கிரமித்து தளம் அமைத்துள்ள சிறிலங்கா கடற்படையினர் அங்கு நிரந்தர கட்டடங்களை நிர்மாணித்து வருகின்றனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
போர்காலத்தில் 2007 ஆம் ஆண்டு மன்னார் சிலாவத்துறையை சிறிலங்கா படையினர் ஆக்கிரமித்திருந்ததை அடுத்து, இதனால் அருகில் உள்ள முள்ளிக்குளம் கிராம மக்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.
அதன் பின்னர் முள்ளிக்குளம் கிராமம் முற்றுமுழுதாக சிறிலங்கா கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்து, பின்னர் சிறிலங்கா கடற்படையினர் இங்கு பாரிய கடற்படைத்தளம் ஒன்றை அமைத்த நிலையில், இலங்கையின் வடமேற்கு கடற்பிராந்தியத்தின் கட்டளைத் தலைமையகத்தையும் முள்ளிக்குளம் கிராமத்தில் நிறுவிக் கொண்டனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் முள்ளிக்குளம் கிராம மக்களின் சுமார் 77 ஏக்கர் காணியை பல அழுத்தங்களின் காரணமாக சிறிலங்கா கடற்படையினர் முசலி பிரதேச செயளாளர் ஊடாக பொது மக்களிடம் கையளித்திருந்த நிலையில், இவ்வாறு கையளிக்கப்பட்ட 77 ஏக்கர் காணிகளில் பொதுமக்கள் கொட்டில்களையும் கூடாரங்களையும் அமைத்து வாழ்ந்து வந்தனர்.
இவ்வாறான நிலையில் முள்ளிக்குளம் தமிழ் மக்களின் பாரம்பரிய பூர்விக காணிகளில் சிறிலங்கா கடற்படையினர் தற்போது நிலையான கட்டடங்களை அமைத்து வருவதாக முறையிடப்பட்டுள்ளது.
முள்ளிக்குளம் பிரதேச மக்களின் நூறு ஏக்கர் காணிகள் கையளிக்கப்படும் என்று மைத்திரி- ரணில் அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் 77 ஏக்கர் காணிகள் மாத்திரமே பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டிருந்ததுடன், மிகுதி 23 ஏக்கர் காணிகளும் இதுவரை கையளிக்கப்படவில்லை.
முள்ளிக்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை தளத்தின் முன் பகுதியில் பாதுகாப்பு முன்னரங்குகள் உள்ளதனால், நாளாந்தம் கடற்படையினரின் பிரசன்னமும் நடமாட்டமும் பயிற்சி நடவடிக்கைகளும் அப்பகுதியில் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.