ஆர்ஜென்டினாவின் முன்னாள் சனாதிபதி கிறிஸ்டினா பெர்னான்டஸ் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அவரது நிர்வாக காலப்பகுதியில் பொதுப்பணி ஒப்பந்தங்களின் போது கட்டுமான நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாக ஒரு கூட்டாட்சி நீதிபதி நேற்று வெளியிட்ட குற்றச்சாட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டினா பெர்னாண்டஸின் 2007 தொடக்கம் 2015 வரையான இரண்டு தவணை ஆட்சி காலத்தில், ஒரு பரந்த ஊழல் வலையமைப்பின் தலைமையில் அரசியல்வாதிகள் மற்றும் வணிகர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்பதை ஆர்ஜென்டீனாவின் நீதித் துறை தீர்மானிக்க முயல்கின்றது.
கிறிஸ்டினாவின் திட்டமிடல் அமைச்சர் ஒருவர் வசமிருந்த குறிப்பு பதிவு புத்தகத்தை செய்தித்தாள் ஒன்று கடந்த ஓகஸ்ட் மாதம் வெளியிட்ட நிலையில் இந்த ஊழல் மோசடி விவகாரம் வெளிவந்துள்ளது.
அந்த குறிப்பேடுகள் அரசாங்க அலுவலகங்கள், கிறிஸ்டனாவின் தனிப்பட்ட இல்லம், அவரது முன்னாள் கணவர் மற்றும் முன்னாள் சனாதிபதி நெஸ்டர் கிரிச்நர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் பணப் பைகள் தொடர்பான விபரங்களை பட்டியலிட்டுள்ளன.
எனினும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கிறிஸ்டினாவின் பேச்சாளர் உடனடியான எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை.
செனட்டர் என்ற வகையில் அவர் கைது செய்யப்படுவதிலிருந்து விலக்களிக்கப்பட்ட போதும், வழக்கு விசாரணைகளில் இருந்து தப்ப முடியாது என்று ஆர்ஜென்டினாவின் நீதித்துறை எச்சரித்துள்ளது.