இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் எழுந்த ஆழிப்பேரலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200ஐத் தாண்டியுள்ளது.
இந்தோனேசியாவில் ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், இதன் பின்னர் ஏற்பட்ட சுனாமி அலைகள், இந்தோனேசியாவின் பல பகுதிகளைத் தாக்கியுள்ளன.
குறிப்பாக சுலாவேசி தீவில் சுமார் 19 அடி உயரத்திற்கு ஆவேசமாக எழுந்த அலைகள் அங்கு பலத்தை சேதத்தை ஏற்படுத்தியதாகவும், பலு மற்றும் டோங்காலா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
பலு கடலோர பகுதியில் இடிபாடுகளில் 821 சடலங்களும், டோங்கலாவில் 11 சடலங்களும் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து உயிரிழப்புக்கள் எண்ணிக்கை 832 ஆக அதிகரித்திருந்ததுடன், இதில் உயிரிழந்தவர்களில் 61 பேர் வெளிநாட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை இந்தோனேசிய காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில், இதுவரை 1203 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அந்தப் பகுதிகளில் கட்டிட இடிபாடுகளிடையே மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.