இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்புவதற்கு அவுஸ்திரேலிய அரசு இடமளிக்கக்கூடாது என்று அந்நாட்டு அரசிடம் அவுஸ்ரேலிய அகதிகள் பேரவை கோரியுள்ளது.
அவுஸ்ரேலிய அரசின் அழைப்பின் பேரில் மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள நிலையிலேயே, அவுஸ்திரேலிய அகதிகள் பேரவை மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இலங்கையில் போர் உக்கிரமாக நடைபெற்ற 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் இறுதிக்கட்டத்தில், இலங்கை அரசின் பதில் பாதுகாப்புச் செயலராகச் செயற்பட்டவர் மைத்திரிபால சிறிசேன என்பதையும், இந்த காலப் பகுதியிலேயே அதிகளவான தமிழ் மக்கள் அரச படைகளால் கொன்று குவிக்கப்பட்டனர் என்பதையும் அந்த அமைப்பு சுட்டிக்காடடியுள்ளது.
இலங்கையின் சனாதிபதியாக 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்று கொண்டதன் பின்னரும், இலங்கையில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்கின்றது எனவும் அது தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கை அரசுடன் அவுஸ்திரேலிய அரசு நெருக்கமான உறவைப் பேணுகின்றது எனவும், இலங்கை அரசின் துன்புறுத்தல்களிலிருந்து தப்பிவருகின்ற தமிழ் அகதிகளை அவுஸ்திரேலியா தனது நாட்டுக்குள் அனுமதிக்க மறுக்கின்றது எனவும் அந்த அமைப்பு சாடியுள்ளது.
இலங்கையின் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச 2011ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு பயணித்தபோது, அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்க முற்பட்ட போதும், அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் அதனைத் தடுத்து விட்டதனையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்படுகின்றபோது, அவ்வாறு அதனைத் தடுக்க முற்படக்கூடாது என்று கோரிக்கை விடுப்பதாகவும் அவுஸ்திரேலிய அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.