இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு பல நன்மைகள் செய்தாலும், இன்னும் உதவிகளை செய்யக் கூடிய வாய்ப்பு இந்தியாவுக்கு இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று காலை நெல்லைக்கு சென்றுள்ள நிலையில், அங்கு நெல்லையப்பர் கோவில் அர்ச்சகர் மணி பட்டர் தலைமையில் முதலமைச்சருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்தமருத்துவ கல்லூரியில் உள்ள அகத்தியர் கோவிலில் நடைபெற்ற பூஜையிலும் கலந்துகொண்ட தன் பின் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த முதலமைச்சர், இலங்கை தமிழர்கள் உரிமையை மீட்டெடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்வது ஒன்றும் பெரிய விடயம் அல்ல எனவும், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் தற்போதைய நிலை குறித்து இந்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் வாழ்வு மேம்பட இன்னும் அதிகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு பல நன்மைகள் செய்தாலும் இன்னும் கூடுதல் உதவிகள் செய்ய கூடிய வாய்ப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.