ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான இணையம் மூலமான வாக்குப்பதிவுகள் இன்றிலிருந்து ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இன்று தொடங்கியுள்ள இந்த வாக்குப் பதிவுகள் எதிர்வரும் வியாழக்கிழமை வரை தொடரவுள்ளதுடன், எதிர்வரும் 10ஆம் நாள் சனிக்கிழமை முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு ஒன்றினை அடுத்து, பற்றிக் பிரவுன் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து, புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான நடவடிக்கைள் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.
தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுதலித்துவரும் பற்றிக் பிரவுன், மீண்டும் தலைவர் பதவிக்கான போட்டியில் இணைந்து கொண்ட போதிலும், கடநத வாரத்தில் அவர் அதிலிருந்து விலகிக்கொண்டார்.
இவ்வாறான நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிறிஸ்டீன் எலியோட், வழக்கறிஞரும் வர்த்தகருமான கரோலைன் முல்ரோனி, முன்னாள் ரொரன்ரோ நகரசபை உறுப்பினர் டக் ஃபோர்ட், பெற்றோர் உரிமைகள் செயற்பாட்டாளர் தான்யா கிரானிக் அலென் ஆகிய நால்வரும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் ஒருவரை தலைவராக தெரிவு செய்வதற்கான வாக்கப் பதிவுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், வாக்களிப்பதற்காக தம்மை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்வதறகான காலக்கெடு இன்று வரையிலும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது அது திங்கட்கிழமை இரவு 11.59 வரையிலும் என்று காலநீடிப்புச் செய்யப்பட்டுள்ளது.