கனடா அமைச்சரவையில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட அனிதா ஆனந்த் என்ற பெண் இடம்பெற்றுள்ளார். கனடா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முதல் இந்து என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
கனடா நாடாளுமன்றத்துக்கு கடந்த அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கும், ஆண்ட்ரூ ஸ்கீர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களில் வெற்றிபெற்று, தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்தது.
இந்திய நாடாளுமன்றத்தில் மொத்தம் 13 சீக்கிய எம்பிக்கள்தான் உள்ளனர். ஆனால், கனடா நாடாளுமன்றத்தில் 18 சீக்கிய எம்பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக்கொண்டது. அந்த அமைச்சரவையில் முதல்முறை எம்பியாகி உள்ள தமிழ்நாட்டின் வேலூரைச் சேர்ந்த அனிதா ஆனந்த் என்ற பெண் இடம்பெற்றுள்ளார்.
அனிதா ஆனந்த், பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சராகி இருக்கிறார். கனடாவில் ஒரு இந்துப்பெண் எம்பி, அமைச்சர் ஆகி இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் ஆன்டாரியா மாகாணத்தில், ஓக்வில்லே தொகுதியில் இருந்து கனடா நாடாளுமன்றத்துக்கு லிபரல் கட்சி சார்பில் அனிதா ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை டாக்டர் சுந்தரம் விவேகானந்த் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் ஆவார். தாயார் டாக்டர் சரோஜ், மயக்க மருத்துவ நிபுணர் ஆவார்.
கனடாவில் நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் கென்ட்வில்லே நகரில் 1967ம் ஆண்டு பிறந்த அனிதா ஆனந்த், முதுநிலை சட்டப்படிப்பு படித்து அங்குள்ள டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பேராசிரியையாக பணியாற்றியுள்ளார். சிமோன் லேனா சிங் என்ற கணவரும், 4 குழந்தைகளும் உள்ளனர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த மேலும் 3 பேருக்கு ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சர் பதவி அளித்துள்ளார். அவர்கள் 3 பேரும் சீக்கியர்கள் ஆவார்கள். அவர்கள் முந்தைய அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தனர்.
புதிய அமைச்சரவை குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டுவிட்டரில், “புதிய அமைச்சரவை வலுவான, திறமையான அணி ஆகும். நிறைய பணிகள் காத்திருக்கின்றன. கனடாவை முன்னோக்கி அழைத்துச்செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்