கிளிநொச்சியில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் நாள் அன்று ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் எவ்வித தீர்வும் இன்றி இன்னும் ஜந்து நாட்களில் ஒரு ஆண்டை எட்டுகிறது.
இன்று 360 வது நாளாக தொடர்ச்சியாக இரவு பகலாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் இடம்பெற்றுவரும் போராட்டமே இவ்வாறு தீர்வின்றி ஒரு ஆண்டை பூர்த்தி செய்யவுள்ளது.
போர்க் காலத்திலும், போர் நிறைவுக்குகொண்டு வரப்பட்ட பின்னரும் சிறிலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டும், கடத்தப்பட்டும் என்று பல வழிகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தங்களின் உறவுகளுக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் வருகின்ற 19ஆம் நாளுடன் ஒரு ஆண்டை எட்டுகிறது.
இவ்வாறு ஒரு ஆண்டை எட்டியுள்ள போதிலும், எவ்வித தீர்வுகளும் எட்டப்படாத நிலையில் தங்களின் போராட்ட வடிவத்தை மாற்றப் போவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.