கியூபெக் மாகாண அரசியல் கட்சியான பார்ட்டி கீபெக்வாவின் வேட்பாளர் கய் லேக்லயர், மாகாண தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளார்.
குடிபோதையில் காவல்துறை அதிகாரியின் உத்தரவை மீறி வாகனம் செலுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து, தனது வேட்பு மனுவை மீளப் பெறுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டிலிருந்து தான் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்ற போதிலும், கட்சியின் நலனை கருத்திற் கொண்டு தான் இந்தத்தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் தேர்தலுக்கு பத்து நாட்களுக்கு முன்பதாக எதிர்வரும் 21ஆம் நாள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.