முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கூட்டமைப்பு பல உண்மைகளை மூடி மறைத்து வருகின்றது என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்

703

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பல உண்மைகளை மூடி மறைத்து வருவதுடன், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பு அனைத்துலக சமூகத்திடம் இருந்து இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்தும் வருகிறது எனவும், இதனாலேயே பங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை ஆகியன இவ்வளவு தாமதமாகி வருகிறது என்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு ஜெனீவா தீர்மானத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டிருப்பதுடன், அதற்கு இலங்கை அரசாங்கமும் தனது இணக்கப்பாட்டினை தெரிவித்திருக்கின்றது என்றும் தெரிவித்துள்ள அவர், அவ்வாறான பயங்கரமான சட்டத்தின் கீழேயே தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அணுகுமுறை மிகவும் பலவீனமானதாக உள்ளது எனவும், அரசாங்கமே இணங்கி நீக்குவதாக கூறிய பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் விடயத்தில் அதே அரசாங்கம் ஒன்றும் செய்யாமல் இருப்பதை தமிழ்தேசிய கூட்டமைப்பு பார்த்துக் கொண்டிருப்பதுடன், அந்த அரசாங்கத்தை பாதுகாக்கவும் செய்கிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க அரசு இணங்கியதாக கூறியதை பெரிய விடயமாக தூக்கி பிடித்த தமிழ்தேசிய கூட்டமைப்பு, அதனை நடைமுறையில் செய்வதற்கு அரசு இதுவரை ஒன்றுமே செய்யாமையினை இலங்கை அரசுக்கும், அனைத்துலக சமூகத்திற்கும் காட்டுவதில் தவறியுள்ளது எனவும், அதேபோல் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டம் வருகிறது எனவும், அது இருப்பதை காட்டிலும் மோசமானது என்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பே பல இடங்களில் கூறியுள்ளது எனவும் அவர் சாடியுள்ளார்.

அந்த கருத்துக்கள் வெறுமனே தமிழ் மக்களுக்கு மட்டும் கூறப்படும் கருத்துக்களே தவிர, முன்னர் கூறியதைபோல் அனைத்துலகத்திற்கு இந்த உண்மையை சுட்டிக்காட்டி அரசாங்கம் தாம் ஜெனீவாவில் இணங்கிய விடயத்தை செய்யவில்லை. என்று காட்டுவதற்கு தவறியுள்ளது எனவும், இதனால் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிய அரசியல் கைதிகள் இன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் விபரித்துள்ளார்.

அந்த வகையில் அரசியல் கைதிகள் பழிவாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனவும், தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவது துரதிஸ்டவசமானது என்றும், மக்களின் அங்கீகாரத்தை பெற்ற அரசியல் தலமைகளே அதனை செய்திருக்கவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த முறை தமது வழக்குகளை வவுனியா நீதிமன்றிலேயே நடாத்துமாறுகோரி போராட்டம் நடத்தி தயாரானபோது தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் அந்த போராட்டத்தை குழப்பினார் எனவும், இந்த நிலையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் 8 தமிழ் அரசியல் கைதிகள் தமக்கு புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்யவேண்டும் எனகோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடாத்திவருகின்றனர் என்றும், அவர்களுடைய போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதுடன், அவர்களுடைய போராட்டங்களை வலுப்படுத்தும் வகையில் போராட்டங்களை நடாத்துவதற்கான பேச்சுவார்த்தைகளையும் நடாத்த திட்டமிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பொது அமைப்புக்கள், கல்வி சமூகம் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் எனவும், இது வெறுமனே அரசியல் கைதிகளுடைய பிரச்சினையோ அல்லது அவர்களுடைய குடும்பங்களுடைய பிரச்சினையோ அல்ல எனவும், இது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தினதும் பிரச்சினையும், ஒட்டுமொத்த தமிழ்சமூகத்தினது பொறுப்புமாகும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *