கைத்துப்பாக்கிகளை தடை செய்யும் அதிகாரத்தினை நகர நிர்வாகங்களுக்கு வழங்குமாறு மத்திய அரசிடம் புதிய சனநாயக கட்சித் தலைவர் ஜக்மீட் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள மிக நீண்ட கடிதம் ஒன்றிலேயே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
அதிகரித்துவரும் வன்முறைகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும், அவற்றுக்கான நீண்டகால திட்டங்கள் தொடர்பிலும் இந்தக் கடிததில் விளக்கியுள்ள அவர், காவல்துறையினரின் பிரச்ன்னத்தை அதிகரிப்பதன் மூலம் மட்டும் நகரங்களில் இடம்பெறும் துப்பாக்கி வன்முறைகளை கட்டுப்படுத்திவிட முடியாது என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி வீதிச் சோதனைகள், சுற்றுக்காவல் சோதனைகள் என்பவற்றை அதிகரிப்பதால் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலை தோன்றுவதாகவும், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான நம்பிக்கையீனம் அதிகரிப்பதாகவும் அவர் விபரித்துள்ளார்.
குறிப்பாக சில இன மக்கள், பழங்குடியின மக்கள், மனநல பிரச்சினை உள்ளோர் போன்ளோர் இவ்வாறான காவல்துறை நடவடிக்கைகளால் வேறுவிதமான பாதிப்புகளை எதிர்கொள்ளும் நிலைமை உருவாகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றுக்கு பதிலாக கைத்துப்பாக்கிகளை தடை செய்யும் அதிகாரத்தினை நகர நிர்வாகங்களுக்கு வழங்கலாம் எனவும், சட்டவிரோத துப்பர்ககிகள் மூலமே பெரும்பாலான வன்முறைகள் இடம்பெறும் நிலையில், நகர அதிகாரிகள் அதனை கட்டுப்படுத்தும் அதிகாரம், இந்த பிரச்சினைக்கு சிறந்த தீர்வை வழங்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நகர நிர்வாகிகளுக்கே அவர்களது சமூகம் சார்ந்த பிரச்சினைகளும், நிலைப்பாடுகளும் மிகவும் தெளிவாகவும், ஆழமாகவும் தெரியும் என்ற வகையில், இவ்வாறான வன்முறைகளை கட்டுப்படுத்தி தமது சமூகத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் செயற்பாட்டினை அவர்களால் இலகுவாக மேற்கொள்ள முடியும் எனவும், அதற்கு அவர்களுக்கான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் புதிய சனநாயக கட்சித் தலைவர் ஜக்மீட் சிங் வலியுறுத்தியுள்ளார்.