முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சிங்கள ஆட்சியாளர்களின் பசப்பு வார்த்தைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மயக்கமடைந்துள்ளார்கள் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

2073

இலங்கை ஆட்சியாளர்களின் பசப்பு வார்த்தைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மயக்கமடைந்துள்ளார்கள் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நம்பினார் கெடுவதில்லை என்று கூறிக்கொண்டு அவர்கள் ஆட்சியாளர்களை நம்பிக் கொண்டிருக்கிறார்கள் எனவும். ஆனால் ஆட்சியர்கள் தம் சுயநலன்களில் அக்கறையாக உள்ளார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய தமிழர்களின் அரசியல் இன்று சுயநலவாதத்துடன் வெறும் கட்சி அரசியலாகவே முன்னெடுக்கப்படுகின்றது என்றும், அனுபவசாலிகள் என்றும், வயதில் மூத்தவர்கள் என்றும் பெருமித்துக் கொள்கின்ற ஒரு சிலரின் சர்வாதிகாரப் போக்கினால், இன்று ஒற்றுமையாக இருந்த கட்சிகள் சிதறுண்டு போயுள்ளன எனவம் அவர் கவலை வெளியிட்டு்ளார்.

அதனால் அரசியல்வாதிகளுக்கு ஏதேனும் நன்மைகள் கிட்டலாம் என்ற போதிலும், பாதிக்கப்படுகின்றவர்கள் தமிழ் மக்களே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இருந்து மீண்டெழுந்து தமிழர்கள் தமது இருப்பினை தக்கவைத்துக் கொள்வார்களா, அதற்காக அவர்கள் செய்ய வேண்டியது என்ன என்று, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

வெறும் சுயநலக் காரணங்களுக்காக மட்டும் பெரும்பான்மை மக்கள் தலைவர்களின் பசப்பு வார்த்தைகளில் கூட்டமைப்பின் தலைவர்கள் மயக்கம் அடைந்துள்ளார்கள் என்று கூறுவதற்கு தனது மனம் விடவில்லை எனவும், உண்மையில் ‘நம்பினார் கெடுவதில்லை’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மைத் தலைவர்களை அவர்கள் நம்பி வருகின்றார்கள் என்று கூடக் கூறலாம் எனவும் அவர் விரித்துள்ளார்.

ஆனால் அவர்களின் செயலில் தனக்கிருக்கும் ஆதங்கம் வேறு எனவும், ‘தருவதைத் தாருங்கள்’ அல்லது ‘தருவதைப் பெறுவோம்’ என்று கூறுவது ஒன்று, ‘தந்ததுடன் நாங்கள் திருப்தி அடைகின்றோம்’ என்று கூறுவது வேறு என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், எங்கே எமது தலைமைத்துவங்கள் குறைந்ததையேற்று எமது வருங்காலத்தை குறைபாடுடையதாக ஆக்கிவிடுவார்களோ என்றே அஞ்சுகின்றேன் எனவும் அதங்கம் வெளியிட்டுள்ளார்.

அரசாங்கம் தருவதைத் தருவது அவர்களது விருப்பம் என்ற போதிலும், எமது வாழ்வுரிமை, வரலாற்றுரிமை, வள உரிமை வேறு எனவும், அதை நாம் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் வலியுறுத்தியுள்ள அவர், அதனை விட்டுக்கொடுத்தால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் பெரும்பான்மை இனத்தவரைப் பெரும்பான்மையாகப் நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு 25 ஆண்டுகள் தேவையில்லை எனவும் எச்சரித்துள்ளார்.

இதனைப் புரிந்து கொள்ளாமல், நாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்களே என்று ஆக்ரோஷமாக அடித்துப்பேச முற்பட்டோமானால், எமது அழிவு வெகு தூரத்தில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை உணர்ந்தே எமது சகோதரர்கள் மக்கள் பாற்பட்ட, மக்கள் மயப்பட்ட ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள் எனவும், அதாவது மக்களின் தலைவர்கள் என்று கூறப்படுபவர்கள் எங்கே மக்கள் மனம் அறியாமல், எமது மாண்பை மலினப்படுத்தி விடுவார்களோ என்ற பயம் பலர் மனதிலும் இப்பொழுது எழுந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது போராட்டம் நாம் மனமுவந்து போராடும் ஒன்றாக இருக்க வேண்டும், போராட்டத்துக்கான காரணம் பற்றி நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும், வெறுப்பு, கோபம், ஆத்திரம் ஆகியவற்றைக் களைந்திருக்கத் தெரிய வேண்டும், வெறும் பொருளாதார நன்மைகள் பெறப்பட்டால் நாம் போராட்டத்தை கைவிட்டுவிடுவோம் என்று இருக்கக்கூடாது என்பவற்றையும் அவர் விபரித்துள்ளார்.

எம்முள் பலர் கூடி எமக்கென ஒரு வழி சமைத்து, எமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் அவற்றை உள்ளடக்கிய போதிலும், அவை கிடைக்கமாட்டா என்று தமிழ்த் தலைமைகள் தீர்மானித்தால், தமது தலைமைத்துவத்தை வேறு யாரிடமாவது கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வதே உசிதம் எனவும், அதைவிடுத்து நாம் கேட்பவை கிடையாது, ஆகவே தருவதை ஏற்போம் என்று கூறுவது தர்மம் ஆகாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாம் போராடுவது ஒரு தார்மீக உரிமைக்காகவே அன்றி, நியாயமற்ற காரணங்களுக்காக அல்ல எனவும், எம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் எங்களிடம் திருப்பித் தருமாறு கேட்பது தவறானதொரு கோரிக்கையாகாது எனவும் தெரிவித்துள்ள அவர், ஒன்றிணைந்து ஒருமித்து எமது தேவைகளை, உரிமைகளைக் கோர வேண்டியதே தற்போது எமக்கிருக்கும் தார்மீகக் கடமை எனவும், உலகில் வாழும் சகல தமிழ்ப்பேசும் மக்களும் எமக்கு இது சம்பந்தமாக உதவி அளிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *