உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில் மனித உரிமைக் கவுன்சிலின் 36-வது அமர்வு செப்டம்பர் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்தக் கூட்டத்தில், உலக நாடுகள் அனைத்திலும் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜெனிவா சென்றுள்ளார் ம.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் வைகோ.
ஜெனிவா கவுன்சில் கூட்டத்தில் தமிழர் உலகம் என்ற அமைப்பின் சார்பில் நேற்று பேசிய வைகோ, ’’வரலாற்றின் வைகறைக் காலத்தில் இருந்து ஈழத்தமிழர்கள்தான் இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிமக்கள். சிங்கள இனவாத அரசுகளின் ராணுவத்தால் ஈழத்தமிழர்கள் கொடூரமான படுகொலைக்கு, இன அழிப்புக்கு ஆளானார்கள். 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே 18-ம் தேதி வரை நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழர்கள் மிருகத்தனமாகக் கொன்று குவிக்கப்பட்டார்கள்.
சிங்கள அரசு நடத்திய தமிழ் இனப் படுகொலைக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டிய இதே மனித உரிமைக் கவுன்சில் 2009-ம் ஆண்டு மே கடைசி வாரத்தில், இலங்கை அரசு நடத்திய மிகக் கோரமான படுகொலைக்குப் பாராட்டுத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது என்பதை வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறேன். ஐ.நா. சபை 2010-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அமைத்த மார்சுகி தாருஸ்மென், ஸ்டீவன் ராட்னர், லாஸ்வின் சூகா ஆகிய மூவர் குழு, ஈழத்தில் நடந்தது தமிழ் இனப்படுகொலை என்பதற்கு ஆணித்தரமான ஆதாரங்களுடன் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிக்கை சமர்ப்பித்தது.
இலங்கையின் பூர்வீகத் தமிழர் தாயகத்தில் பல்லாயிரக்கணக்கான சிங்களவர்களை சிங்கள அரசு கொண்டுவந்து குடியமர்த்துகிறது. காணாமல் போன தமிழர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. சிங்கள இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஈழத்தமிழர்கள் வாழும் இடமே கொடும் சிறையாகிவிட்டது.
இருண்டு கிடக்கின்ற ஈழத்தமிழர் வானத்தில் தற்போது தோன்றியுள்ள ஒரே ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று யாதெனில், மனித உரிமை ஆணையர் அல்ராத் உசேன், ’சிங்கள இராணுவம் நடத்திய யுத்தக் குற்றங்களை உலகத்தில் எந்த நாடும் விசாரிக்கலாம்’ என்று கூறியது தான். நெஞ்சம் வெடிக்கின்ற வேதனையோடும், துயரத்தோடும் மதிப்புமிக்க மனிதஉரிமைக் கவுன்சிலை மன்றாடிக் கேட்கிறேன். ஈழத்தமிழர்களின் தாயகத்திலும், உலகெங்கும் உள்ள புலம்பெயர்வாழ் ஈழத் தமிழர்களிடத்திலும் சுதந்திரமான இறையாண்மையுள்ள தமிழ் ஈழ தேசத்திற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த முன்வாருங்கள். “ என்று அவர் அழைப்பு விடுத்தார்.