திருகோணமலை – மூதூரில் 2006ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட 17 தொண்டு நிறுவனப் பணியாளர்கள் தொடர்பில் தொடர்ந்தும் நீதி கோரப்படுகிறது.
12 ஆண்டுகளுக்கு முன்னர் ஓகஸ்ட் மாதம் 6ஆம் நாளன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையிலான மோதல் இடம்பெற்ற வேளையில் இந்த 17 தொண்டுப் பணியாளர்கள் கொலை செய்யப்பட்டனர்.
எனினும் இதுவரை அவர்களை கொலை செய்த குற்றவாளிகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகாத நிலையில், குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்துமாறு பிரான்ஸை தலைமையகமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான எக்சன் பெய்ம் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகிறது.
எனினும் இலங்கை அரசாங்கத்தினால் இன்னமும் குற்றவாளிகளை நீதிக்கு முன் கொண்டு வரமுடியவில்லை என்று எக்சன் பெய்ம் நிறுவனத் தலைவர் போலின் செட்சுடி குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் இந்தக் கொலைகள் தொடர்பில் சாட்சியங்களை முன்வைத்தவர்கள் மீதும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே குறித்த கொலைகள் தொடர்பில் நியாயமான சுதந்திரமான பொறிமுறையின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் எக்சன் பெய்ம் நிறுவன தலைவர் போலின் செட்சுடி கோரிக்கை விடுத்துள்ளார்.