நாடாளுமன்றத்தில் 103 ஆசனங்களைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியை, 14 ஆசனங்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பணயக் கைதியாகப் பிடித்து வைத்திருக்கிறது என்று மகிந்த ராஜபக்ச சீற்றம் வெளியிட்டுள்ளார்.
50 நாட்கள் தலைமை அமைச்சராகப் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்ச, இன்று பதவியில் இருந்து விலகிய பின்னர், வெளியிட்ட சிறப்பு அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க தலைமை அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்று 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர் என்றும், அதில் 14 வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடையவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க தலைமை அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருந்தாலும், அதேநாள் நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் எனவும், அதில் அவர், ரணில் விக்கிரமசிங்க தலைமை அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்று வாக்களித்தாலும், தாங்கள் அரசாங்கத்தில் சேரப் போவதில்லை எனவும், எதிர்க்கட்சியிலேயே இருப்போம் என்றும் கூறியிருந்தார் என்றும் மகிந்த தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இங்கு உண்மையில் என்ன நடந்தது என்றால், 103 ஆசனங்களைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியை கூட்டமைப்பு பணயக் கைதியாக வைத்துள்ளது எனவும், கூட்டமைப்பின் கருத்துக்களுக்கு இணங்கவில்லை என்றால், ஐக்கிய தேசியக் கட்சி எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கக் கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அந்த வகையில் நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தும் கருவியை கூட்டமைப்பே இப்போது வைத்திருக்கிறது என்றும் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.