பிரதமர் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அறிவித்து, சபாநாயகர் சனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்துக்கு, சனாதிபதி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதில் குறித்த அவநம்பிக்கை பிரேணை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பிரேரணை மீதான விவாதத்தின் போது, சபாநாயகர் நாடாளுமன்ற மரபுகள், நிலையியல் கட்டளைகள் மற்றும் அரசியல் யாப்பு என்பனவற்றை மீறி செயற்பட்டிருப்பதாகவும் சனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றம் தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள தங்களது செயற்பாடுகள் இந்த வழக்கின் தீர்ப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக அமையும் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று முன்வைக்கப்பட வேண்டிய முறை மற்றும் அதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் அரசியலமைப்பிலும் நிலையியற் கட்டளைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அரசியலமைப்பு, நிலையியற் கட்டளைகள் மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் ஆகியவற்றைக் கருத்திற் கொள்ளாது தாங்கள் செயற்பட்டுள்ளீர்கள் என்பது தெளிவாகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.