கிளிநொச்சி பளைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த மகளும், அவரை அழைத்து வந்த தாயும் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பருத்திதுறை தும்பளையை சேர்ந்த குடும்பம் ஒன்று வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு திரும்பிய தமது மகளை அழைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த போது, இயக்கச்சிக்கும் – பளைக்கும் இடைப்பட்ட பகுதியில் மின் கம்பங்களுடன் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் அவர்கள் பயணம் செய்த வாகனம் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த மகளும் மகளை அழைக்க சென்ற தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அந்த வாகனத்தில் பயணம் செய்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிற்றூர்ந்தின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கத்தினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை இந்த விபத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு அனர்த்தங்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் மூன்று பேர் நீரில் மூழ்கியும், ஆறு பேர் உந்துருளி விபத்துக்களிலும் பலியாகியுள்ளனர்.
ஊருபொக்க – மெகிலியநெத்த – தித்தேணிய கந்த பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 22 வயதுகளை உடைய சகோதரர்கள் இருவர், கிரிந்த கடலில் குளிக்கச் சென்ற நிலையில் நேற்று மாலை நீரில் மூழ்கி பலியாகினர்.
ஹம்பலந்தொட்ட – மாமடுல – மூன்றாம் கட்டை பகுதியில் நீர்த்தடாகம் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி பலியான நிலையில், எம்பிலிப்பிட்டி, கிரிவுல்ல, யட்டியாந்தொட்ட, மீகஹதென்ன, தன்திரிமலை, திக்வெல்ல ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற உந்துருளி விபத்துகளில் ஆறு பேர் பலியாகினர்.
அத்துடன் அம்பலாந்தொட்ட தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து பாதையில் பயணித்துக் கொண்டிருந்த 18 வயதான இளைஞர் ஒருவர் தொடரூந்தில் மோதி நேற்று உயிரிழந்துள்ளார்.