பொய்யான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையாகக் கொண்டு தலையிடுவதாக அமெரிக்கா மீது செளதி அரேபியா கண்டனம் வெளியிட்டுள்ளது.
ஏமனில் செளதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படைகளுக்கு இராணுவ உதவியை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க செனட் வாக்களித்துள்ளதுடன், செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலைக்கு செளதி பட்டத்து இளவரசரை குறைகூறிய அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே செளதி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்ததாக அந்த நாட்டு அரசு செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், அமெரிக்க செனட்டின் தற்போதையை நிலைப்பாட்டிற்கு தனது கண்டனத்தை செளதி அரேபியா தெரிவித்துள்ளது.
பொய்யான குற்றச்சாட்டுகளின் மீது கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம், தங்கள் நாட்டின் உள் விவகாரத்தில் தலையீடு செய்வதாக உள்ளது என்றும் அது கூறியுள்ளது.
அத்துடன் செளதி அரேபியா ஏற்கனவே குறிப்பிட்டது போல், செளதி குடிமகன் ஜமால் கஷோக்ஜியின் கொலை வருத்தத்திற்கு உரியது என்றும், இந்தக் கொலை, செளதி அல்லது அதன் அமைப்புகளின் கொள்கையை பிரதிபலிக்கவில்லை எனவும் அது தெரிவித்துள்ளது.
கஷோக்ஜி கொலை வழக்கில் விசாரணை நியாயமாக நடப்பதில் தலையீடு செய்யலாம் என்ற குற்றச்சாட்டை நிராகரிப்பதை மீண்டும் தாங்கள் வலியுறுத்துவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை செளதி அரேவியாவின் இந்த அறிக்கைக்கு வெளிப்படையாக எந்தவித பதிலையும் அமெரிக்கா இதுவரை தெரிவிக்கவில்லை.
வியாழக்கிழமையன்று நிறைவேற்றப்பட்ட இந்த அமெரிக்க செனட்டின் தீர்மானங்கள் சட்டமாவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றும், அவை விவகாரங்களின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுவதற்கானது என்றும் கருதப்படுகிறது.
ஆனால் செளதி அரேபியா தொடர்பான கொள்கைகள் மீது அமெரிக்க எம்.பிக்களின் கோபத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு உணர்த்துவதாக இந்த தீர்மானம் பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.