போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்யப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை மீது தொடர்ச்சியான கவனத்தினை செலுத்தவேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட சிலவற்றையே தற்போதைய அரசாங்கம் செய்துள்ளது எனவும் பல விடயங்கள் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
இலங்கை விடயத்தில் சர்வதேசத்தின் கண்காணிப்பு அதிகமாக இருக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இலங்கை விவகாரத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு கொண்டுசெல்வதில் சீனாவின் செயற்பாடு பல தடைகளை ஏற்படுத்துகின்றன என தெரிவித்தார்.
மகிந்தவின் ஆதரவு நிலைப்பாட்டினை சீனா கொண்டிருப்பதன் காரணமாக ஐக்கிய நர்டுகளின் பல தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்கவில்லை என்றும் யோகேஸ்வரன் வருத்தம் வெளியிட்டார்.