இரண்டாம் உலகப்போரின் போது யப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியதன் 73ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் ஹிரோசிமா நகரில் இன்று முன்னெடுக்க்பபட்டது.
இதில் ஹிரோஷிமா நகரபிதா கசுமி மட்சுய் (Kazumi Matsui), யப்பான் பிரதமர் சின்சோ அபே, அணுகுண்டுவெடிப்பில் இருந்து தப்பி உயிர்பிழைத்தோர் உள்ளிட்ட ஐம்பதாயிரம்பேர் கலந்து கொண்டு அமைதி வணக்கம் செலுத்தினர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஹிரோஷிமா நகரபிதா கசுமி மட்சுய், தன்னை மட்டும் முன்னிலையில் வைக்கும் கொள்கைகள் வேண்டாம் என்றும், உலகப் பாதுகாப்புக்கு அணுவாயுதங்கள் தீங்கு விளைவிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அணுவாயுதம் இல்லாத ஓர் உலகை உருவாக்க உலகத் தலைவர்கள் பாடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரண்டாம் உலகப்போரின் அமெரிக்காவின் பியர்ல் துறைமுகம் மீது எதிர்பாராவிதமாக யப்பான் குண்டுவீசி நடாத்திய தாக்குதலில் அமெரிக்க பாதுகாப்புப்படையினர் பலர் உயிரிழந்தனர்.
அதற்கு பழிதீர்க்கும் நடவடிக்கையாக யப்பானின் ஹிரோஷிமா நகரில் ஓகஸ்டு மாதம் 6ஆம் நாள் அமெரிக்க போர் விமானம் அணுகுண்டு வீசி அந்த நகரை நிர்மூலமாக்கியதில், ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் பேர் உயிரிழந்தனர்.
மூன்று நாள் கழித்து நாகசாகியில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் 70,000 பேர் கொல்லப்பட்டனர்.
அதன் பின்னர் யப்பான் சரணடைந்ததால், இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.