ரொரன்ரோவில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த பலத்த மழை காரணமாக வீதிகள் பல சேதமடைந்துள்ளதுடன், பல இடங்களில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளன.
அவ்வாறு வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட வேளையில் ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் வெள்ள நீரினுள் சிக்குண்ட மின் தூக்கியினுள் இரண்டு ஆண்கள் சிக்குண்ட நிலையில், அவர்கள் பலத்த முயற்சியின் பின்னர் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று இரவு 50 மில்லிமீட்டரில் இருந்து 100 மில்லி மீட்டர் வரையிலான மழைப் பொழிவை எதிர்பார்ப்பதாக கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் நேற்று மாலையிலேயே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நோர்த் யோர்க் மற்றும் டவுன்ரவுன் மத்திய பகுதிகளில் இரண்டு மூன்று மணி நேரங்களினுள்ளேயே 50 இலிருந்து 75 மில்லிமீட்டர் வரையிலான மழை பொழிந்துள்ளது.
இதனால் திடீரென்று ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, வீதிகள், வாகனங்கள், கட்டிடங்களின் கீழ் மற்றும் நிலக்கீழ்த் தளங்கள் விரைவாகவே வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டது.
இவ்வாறான நிலையில் Jane Street மற்றும் St. Clair Avenue பகுதியில் அமைந்து்ளள கட்டிடம் ஒன்றின் மின் தூக்கியினுள்ளும் வெள்ளம் புகுந்த நிலையில், செயலிழந்துபோன அந்த மின் தூககியுன்ளேயே இரண்டு ஆண்கள் சிக்குண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்பு படையினர் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், அவர்கள் சிக்குண்டிருந்த மின் தூககி முற்றாக வெள்ள நீரினுள் மூழ்குவதற்கு இன்னமு்ம ஒரு அடி உயரம் மட்டுமே மீதம் இருந்ததாக கூறப்படுகிறது.
எனினும் விரைந்து செயற்பட்ட மீட்பு குழுவினர், அந்த இருவரையும் ஒருவாறு மீட்டுள்ளனர்.
இதேவேளை Lower Simcoe Street மற்றும் Bremner Boulevard பகுதியில் வெள்ளத்தினுள் சிக்குண்ட வாகனங்களில் இருந்தோரை மீட்பதற்காக சம்பவ இடத்திற்கு ரொரன்ரோ காவல்துறையின் சிறப்பு நீச்சல் பிரிவினர் அழைக்கப்பட்டிருந்தனர்.
அதேபோல நேற்றைய இந்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கு வேளையில் 16,000க்கும் மேற்பட்ட தமது வாடிக்கையாளர்களுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக ரொரன்ரோ ஹைட்ரோவும் தெரிவித்துள்ளது.