அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான போதுமான பாதுகாப்பை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியிருக்கிறது.
இதுதொடர்பாக மன்னிப்புச் சபையினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “இலங்கையில் தங்கியிருந்த அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள், அவர்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அதுகுறித்த முறையான பொலிஸ் விசாரணைகள் இடம்பெறாததுடன் அவர்களுக்கான நீதி பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பழிவாங்கும் வகையில் பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது கும்பலொன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டது.
அவர்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்து வெளியேறிச்சென்று அருகிலுள்ள சனசமூக நிலையத்திலும், பொலிஸ் நிலையத்திலும் தஞ்சம்கோரி தங்கியிருந்த போதிலும் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான போதுமான பாதுகாப்பை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தவறியிருக்கும் அதேவேளை, அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் பணியிலிருந்தும் அரசாங்கம் விலகியுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.