கொழும்பில் மாணவர்கள் உள்ளிட்ட 11பேர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், பிரதான சந்தேக நபருக்கு உதவிய குற்றச்சாட்டில் முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதியும், கூட்டுப் படைகளின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்னவைக் கைது செய்வதற்கு போதுமான ஆதாரம் உள்ளது என்று குற்றப் புலனாய்வு பிரிவு நீதிமன்றில் மீண்டும் தெரிவித்துள்ளது.
ரவீந்திரவைக் கைது செய்வதற்கு போதுமான ஆதாரம் இருக்கின்றது என்று இதற்கு முன்னரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றில் வெளிப்படுத்தியிருந்த நிலையில், இதன் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ரவீந்திர விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, அவர் விசாரணைக்கு முகம் கொடுக்காமல் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தார்.
இந்த விவகாரத்தில் இலங்கை அரச தலைவர் மைத்திரிபால தலையிட்டிருந்ததுடன், ரவீந்திரவைப் பாதுகாக்கும் வகையில் அவர் செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் மாணவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் பிரதான சந்தேக நபருக்கு உதவி புரிந்தமை தொடர்பான வழக்கு கோட்டை நீதிவான் லங்கா ஜெயரட்ன முன்னிலையில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது நேவி சம்பத்துக்கு உதவிய லக்சிறி அமரசிங்க மன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், நேவி சம்பத் தேடப்படுகின்றார் என்பதை அறிந்தும் அவருக்கு அடைக்கலம் கொடுத்து உதவியுடன், அவர் நாட்டை விட்டு வெளியேற போலி ஆவணங்களை தயாரித்துக் கொடுத்துள்ளார் என்றும் லக்சிறி மீது குற்றம் சுமத்தப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நேவி சம்பத்துக்கு உதவிய, ஏற்கனவே பெயர் வெளிப்படுத்தப்பட்டவர்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
அட்மிரல் ரவீந்திரவைக் கைது செய்வதற்கு போதிய ஆதாரம் உள்ளது எனவும், அடுத்த வாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்கு அழைப்பதற்கான கடிதமும் தயார் செய்யப்பட்டுள்ளது என்றும இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.