அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை தாக்கிவரும் ஃபுளோரன்ஸ் புயலில் சிக்கி இதுவரை குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 6 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
வடக்கு கரோலினா பகுதியில் புயலால் மரம் ஒன்று விழுந்ததில் தாய் மகன் பலியாகினதுடன், தந்தை பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பல மரங்கள் விழுந்து வரும் நிலையில் சாலைகளும் சேதமடைந்துள்ளன.
புயலால் சேதமடைந்த விடுதி ஒன்றிலிருந்து பெருமளவளவானோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், புயலின் வேகம் குறைந்துள்ள போதும் பெருமளவில் வெள்ளம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளியன்று வடக்கு கரோலினாவில், முதலாம் நிலை புயலாக உருவான ஃபுளோரன்ஸ் சூறாவளி, விரிட்ஸ்வில்லி கடற்கரையில் மண்சரிவை ஏற்படுத்திய நிலையில், உட்புறங்களில் பேரழிவையும் வெள்ளத்தையும் இந்த சூறாவளி உண்டாக்கும் என்று அமெரிக்காவின் மத்திய அவசரகால மேலாண்மை முகமை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மற்றும் வர்ஜீனியா ஆகிய மாகாணங்களில் வசிக்கும் 1.7 மில்லியன் மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.