சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இன்று காலை வேளையில் ஸ்காபரோவில் இடம்பெற்றுள்ளது.
Warden Avenue மற்றும் Danforth வீதிப் பகுதியில் இன்று காலை ஐந்து மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது, ஆங்கே குறித்த அந்த ஆண் ஆபத்தான காயங்களுடன் காணப்பட்டதாகவும், உடனடியாகவே அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்ததாகவும் ரொரன்ரோ அவசர மருத்துவ்ப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிராபத்தான நிலையில் காணப்பட்ட அவர், சிறிது நேரத்தின் பின்னர் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எவையும் இதுவரை வெளியிடப்படாத நிலையில், சம்பவம் இடம்பெற்ற அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்த காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.