இறுதி போர்க்காலப்பகுதியில் சிறிலங்கா பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் 500 பேரின் விபரங்களை அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான வேலைத்திட்டம் வெளியிட்டுள்ளது.
யாஸ்மின் சூக்கா தலைமையிலான இந்த அமைப்பு ஏற்கனவே கடந்த ஆண்டு இவ்வாறு காணாமல் போன 280 பேரின் விபரங்களை வெளியிட்டிருந்தது.
தற்போது எச்.ஆர்.டீ.ஏ.ஜீ அமைப்பின் ஆய்வுப் பணிப்பாளர் பெற்றிக் போல் தயாரித்துள்ள அறிக்கை ஒன்றில், குறித்த 500 பேரின் விபரங்களும் வெளியாக்கப்பட்டுள்ளன.
2009ம் ஆண்டு மே மாதம் 17ம் நாள் முதல் 19ம் நாள் வரையிலான மூன்று நாட்களுள் குறித்த 500 பேரும் காணாமல் போய் இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையான மக்கள் காணாமல் போனமை, குறித்த நாட்களிலேயே பதிவானதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.