முன்னாள் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான திட்டமெதுவும் இலங்கையில் நடைமுறையில் இல்லாத காரணத்தால், சுவிட்ஸர்லாந்திலுள்ள ஈழத் தமிழர்களை நாட்டிற்கு திருப்பியனுப்ப வேண்டாம் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள சுவிட்ஸர்லாந்தின் நீதியமைச்சர் சிமோனிற்றா சொமறுகா, நேற்று திங்கட்கிழமை வட மாகாண முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசிய போது முதலமைச்சர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
இலங்கையர்களை திருப்பியனுப்புவதற்கு உசிதமான சூழ்நிலை தற்போது இலங்கையில் இல்லை என்றும், அவர்கள் திருப்பியனுப்பப்பட்டால் கைதுசெய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டாலும்கூட, அதற்கு ஒப்பான சட்டமொன்று மீள உருவாக்கப்பட மாட்டாது என்பதற்கான எந்த நிச்சயமும் இல்லை என்பதையும் வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டும் என்பதே தம்முடைய விருப்பம் எனவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், அதற்கான சூழ்நிலை நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதையும் சுவிஸ் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.