இலங்கையில் இடம்பெற்ற 25 ஆண்டுகால உள்நாட்டு போரில் ஈடுபட்ட இருதரப்பும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளன என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் நம்பகத்தன்மையான சாட்சிகளுடன் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் ஸ்மித் தலைமையில், உலகளாவிய ஆரோக்கியம், உலகளாவிய மனித உரிமைகள் மற்றும் அனைத்துலக அமைப்புகள் தொடர்பான வெளிவிவகார அமைச்சின் உப குழு இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஆராய்ந்துள்ளது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஆரம்ப உரையை ஆற்றியபோதே, ஸ்மித் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இலங்கையில் போர் நிறைவடைந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், 25 ஆண்டுகால போர் காரணமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் எனவும், பல்லாயிரக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் பெரும்பான்மையான சிங்கள மக்களுக்கும், சிறுபான்மையான தமிழ் மக்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது எனவும், போரில் ஈடுபட்ட இரு தரப்பும் கற்பனை செய்து பார்க்க முடியாத போர்க் குற்றங்களில் ஈடுபட்டன என்பதற்கு நம்பகத்தன்மையான சாட்சிகளுடன் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பலருக்கு நீதி என்பது இன்னமும் கண்ணுக்கு தென்படாத ஒரு விடயமாகவே உள்ளது எனவும், இலங்கையின் தற்போதய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் மனித உரிமைகள் குறித்து கவனம் செலுத்தி, நீதிக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று கருதிய போதிலும், தற்பபோதைய அரசாங்கம் போதியளவு நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்தி தேர்தலில் போட்டியிட்ட போதிலும், சமூகங்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த இல்ஙகை அரசாங்கம் தவறியுள்ளது எனவும், இனக்குழுக்களுக்கு இடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளன என்றும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் ஸ்மித் மேலும் தெரிவித்துள்ளார்.