வட மாகாண மக்கள் ஏற்காத பொருத்து வீட்டினை திணிக்க முயலும் காரணத்தைக் கூறவேண்டிய கடப்பாடு மத்திய அரசின் மீள் குடியேற்ற அமைச்சருக்கு உண்டு என்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
வட மாகாண மக்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏற்காத பொருத்து வீட்டினை திணிக்க முயலும் காரணத்தை அமைச்சர் தெரியப்படுத்த வேண்டும் எனவும், எமது மக்களிற்கு வீடு வேண்டும் என்பதனை நாம் மீண்டும் மீண்டும் கூறுகின்ற போதிலும், அது கல்வீடாக இருக்க வேண்டும் எனவும், அதற்காக தொங்கிக் கொண்டிருக்கும் வீட்டினை நாம் ஏற்க மாட்டோம் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொருத்து வீடு தொடர்பில் தனிப்பட்ட விருப்பில் இருந்து அகன்று, அதாவது சில்லறை அரசியல் மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் அன்றி, எமது மக்களிற்கான தேவையை அவர்களின் விருப்பத்திற்கேற்ப நிறைவு செய்ய முன்வரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மீள்குடியேற்ற அமைச்சரை தனக்கு 50 ஆண்டுகளாக தெரியும் எனவும், ஓர் ஆழ்ந்த ஆராச்சியின் பின்னர் தான் இந்தத் திட்டம் எமது மக்களிற்கு பொருந்தாது என்று வட மாகாண சபை முடிவெடுத்துள்ளது என்பதனை அமைச்சர் உணர வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தத் திட்டத்தினை தினிப்பதனால் எதிர் காலத்தில் சமுதாயப் பிரச்சணைகளும் ஏற்படும் என்பதற்கும் அப்பால், இதற்கு தற்போது கூறப்படுவதும் ஓர் ஏற்றுக் கொள்ளமுடியாத விலை என்ற நிலையில், இதனை முன்னெடுப்பதற்கு எதற்காக முயற்சிக்கப்படுகின்றது என்பதே தனக்குப் புரியவில்லை எனவும் முதலமைச்சர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அதேவேளை இந்தத் திட்டத்தினை தாம் மட்டும் எதிர்க்கவில்லை எனவும், அதற்கும் அப்பால் இந்தத் திட்டத்திற்கு அரசிற்குள்ளும் எதிர்ப்பு உண்டு என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், அதேவேளை மக்கள் விரும்பாத எந்த திட்டத்தினையும் மக்கள் மீது திணிக்கக்கூடாது என்று இலங்கை சனாதிபதி கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே எமது பிரதேச கால நிலைக்குப் பொருந்தாது இருக்கும் இந்தத் திட்டமானது மலையக காலநிலைக்கு பொருந்தக்கூடும் எனவும், அவ்வாறு பொருந்தினால் அது தொடர்பில் மலையக தலைவர்களுடன் பேசி அவர்களின் விருப்பத்தை அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஓர் நாசகாரத் திட்டத்தினை அரசாங்கம் எம்மீது திணிக்கும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை எனவும், எமது மக்களிற்கு வீடு வேண்டும் என்பதனை தொடர்ந்து கூறுவோம் என்ற போதிலும், அதற்கு பொருத்துவீடு உசிதமல்ல, பொருத்தமான உசிதமான மாற்றுத் திட்டத்தினையே கண்டு பிடிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.