இலங்கையில் உண்மை கண்டறியும் செயல்முறைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக, உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமையை உத்தரவாதப்படுத்துவதற்கான, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் அமைச்சர் மனோ கணேசனைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட அட்டவணைக்குப் பின்னாலேயே இந்த செயல்முறைகள் இருக்கின்றன என்றும், மிக மெதுவாகவே இந்த செயல்முறைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இந்தச் சந்திப்பின் போது ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப்பின் இரண்டு வாரகால இலங்கை பயணம் நாளையுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பல்வேறு தரப்புகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ள அவர், இலங்கையில் இருந்து புறப்பட முன்னர், கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.