இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்துள்ளமை குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டரஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் பர்ஹான் ஹக் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு சனவரி ஐந்தாம் நாள் தேர்தலை நடத்தும் சனாதிபதி சிறிசேனவின் தீர்மானத்தை செயலாளர் நாயகம் கவலையுடன் அறிந்து கொண்டுள்ளார் என்று பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சனநாயக கட்டமைப்புகள் மற்றும் சனநாயக நடைமுறைகளை மதிப்பதன் முக்கியத்துவத்தை செயலாளர் நாயகம் வலியுறுத்த விரும்புகின்றார் எனவும், கருத்து வேறுபாடுகளிற்கு சட்டத்தின் அடிப்படையிலும் உரிய நடைமுறைகளை பின்பற்றியும் தீர்வை காணவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார் என்றும் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பையும் சமாதானத்தையும் உறுதி செய்யவேண்டும் எனவும், மனித உரிமைகள் நீதி மற்றும் நல்லிணக்கத்தை பின்பற்றவேண்டும் எனவும் ஐநா செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.