இலங்கை தொடர்பில் உலகத் தலைவர்கள் கொண்டுள்ள சாதகமான நிலைப்பாடு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று மாலை அங்குள்ள விருந்தினர் விடுதியில் இலங்கை ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.
ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய போசன நிகழ்வில் கலந்துகொண்டபோது, அமெரிக்க சனாதிபதி பரக் ஒபாமா, பொதுச் செயலாளர் பான் கீ மூன் உள்ளிட்ட பல தலைவர்களுடன கலந்துரையாடல்களை நடாத்தியதாகவும், இதன் போதே இலங்கை தொடர்பான தங்களின் சாதகமான நிலைப்பாடுகளை அவர்கள் வெளிப்படுத்தியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தெளிவான மாற்றம் ஒன்று தென்படுகின்றது என்று அமெரிக்க சனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்திருந்ததாகவும், அவ்வாறே ஐ.நா செயலாளர் பான் கீ மூன், இலங்கையின் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் தன்னிடம் வாழ்த்துத் தெரிவித்ததாகவும் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் எல்லோருமே பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு, அவர்களுடைய இந்தச் சாதகமான பிரதிபலிப்புக்கள் தொடர்பில் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது எந்தவொரு நாடும் இலங்கையுடன் வெறுப்புடனோ அல்லது பகைமையுணர்வுடனோ இல்லை என்பதுடன், அனைத்து நாடுகளும் நட்புறவுடன் கூடிய சாதகமான நிலைப்பாட்டுடனேயே உள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், உலகத் தலைவர்களுடைய இந்த சாதகமான நிலைப்பாட்டை இலங்கைக்கு திரும்பிச் செல்லும்போது தாம் எடுத்துச் செல்வேன் என்றும் கூறியுள்ளார்.
அதேவேளை தாம் இன்று புதன்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றும் போது, இலங்கையில் பொருளாதார அபிவிருத்தி, சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றுக்காக தமது அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக உலகத் தலைவர்களுக்கு எடுத்துரைக்க இருப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டுள்ளார்.
சட்டவிரோதமான போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல் தொடர்பில் கூடிய அவதானத்தை செலுத்தவுள்ளதுடன், தான் முன்னெடுத்துவரும் போதைப்பொருளுக்கு எதிரான பிரசார நடவடிக்கைகள் தொடர்பிலும் பொதுச்சபையில் விளக்கமளிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.