ஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு நடத்துவது, மனித உரிமை மீறலாகுமென மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்தின்போது உயிரை பாதுகாத்துகொள்வதற்காக இந்தியாவிற்கு வந்து, அடைக்கலம் புகுந்த மக்களை பல வழிகளிலும் அரசு ஒடுக்கி வருகின்றது என குற்றம் சுமத்தியுள்ளார்.
ஈழத்தமிழ் இளைஞர்களை கண்டதும், அவர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து எந்ததொரு விசாரணையுமின்றி செங்கல்பட்டிலிலுள்ள சிறப்பு முகாமிற்குள் ஆண்டுக்கணக்கில் அடைத்து வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது அவர்களை திருச்சி மத்திய சிறைக்கு இடமாற்றி அங்கு அடைத்து வைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இத்தகைய இளைஞர்கள் விடுதலை எப்போது என்று தெரியாமல் இளைமைக் காலம் முழுவதையும் சிறைக்குள்ளேயே கழிக்கின்றனர் என சுட்டிக்காட்டியள்ளார்.
இந்நிலையிலேயே கடந்த சில நாட்களாக பாஸ்கரன், ரமேஷ், செல்வம் ஆகிய மூன்று தமிழர்களும் சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்காமல் புறக்கணித்து வருகின்றது என வைகோ கவலை வெளியிட்டுள்ளார்.