உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இலங்கையில் பதட்டத்தை அதிகரித்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் மிஷெல் பச்சலெட் கவலை வெளியிட்டுள்ளார்.
இன்று ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 41 ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப உரையில் அவர் இலங்கை குறித்தும் குறிப்பிட்டார்.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் சில ஏற்றுக் கொள்ளத்தக்கவையென்றாலும், பயங்கரவாதத் தடைச் சட்டம் மிகக் குறைந்த காலத்திற்கே நடைமுறைப்படுத்தப்படவேண்டுமென அவர் கூறியுள்ளார்.
இன, மத, அரசியல் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து, அனைத்து வன்முறைக்கும், அனைத்துப் பாகுபாட்டுக்கும் காரணமாக அடிப்படைப் பிரச்சினைகளைக் களைவதற்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டுமென அவர் கேட்டுள்ளார்.
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் கவலையை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய தாக்குதல்கள் ஒரு சிறுபான்மை இனத்தின் மீதான தாக்குதலாக ஆரம்பிக்கக் கூடுமென்றாலும், காலப்போக்கில் முழுச் சமூகத்தையும் பாதிக்குமென்பதை வரலாறு காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் சில மதத் தலைவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் கவலைக்குரியவையெனவும் அவை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும் மிஷெல் பச்சலெட் கேட்டுள்ளார்.