தற்போது ஒன்ராறியோவில் ஆட்சி அமைத்துள்ள முதல்வர் கத்தலின் வின் தலைமையிலான லிபரல் கட்சி, எதிர்வரும் 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில தேர்தலில் வெறும் 7 ஆசனங்களை மட்டுமே வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக அண்மைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
“The Forum Research” அமைப்பு அண்மையில் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் இருந்து இந்த விடயம் தெரியவந்துள்ளது.
எதிர்வரும் மாநில சட்டமன்றத் தேர்தலில் பழமைவாதக் கட்சிக்கும் அதன் தலைவர் பற்றிக் பிரவுனுக்கும் வாக்களிக்கவுள்ளதாக 43 சதவீதம் பேர் தெரிவித்துள்ள நிலையில், ஆன்ரியா ஹோர்வத் தலைமையிலான புதிய சனநாயக கட்சிக்கு வாக்களிக்கவுள்ளதாக 28 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் தற்போது ஆட்சியில் உள்ள கத்தலின் வின் தலைமையிலான லிபரல் கட்சிக்கு எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கவுள்ளதாக வெறும் 19 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இன்றே தேர்தல் நடாத்தபபடுமாக இருந்தால், முற்போக்கு பழமைவாதக் கட்சிக்கு 86 ஆசனங்களும், புதிய சனநாயக கட்சிக்கு 29 ஆசனங்களும், லிபரல் கட்சிக்கு ஏழு ஆசனங்களும் கிடைக்கும் நிலை காணப்படுவதனை பருத்துக் கணிப்ப முடிவுக்ள காட்டுகின்றன.
இதேபோன்றதொரு கருத்துக்கணிப்பு கடந்த பெப்ரவரி மாதத்திலும் நடாத்தப்பட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது, லிபரல் கட்சிக்கான ஆதரவு நிலைப்பாடு தற்போது மேலும் 5 சதவீத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ள “The Forum Research” நிறுவனம், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள லிபரல் கட்சிக்கான ஆதரவு ஒன்ராறியோவில் வெறும் 19 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளமை கவனிக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் ரொரன்ரோவின் 22 ஆசனங்களில் 20ஐக் கைப்பற்றியிருந்த லிபரல் கட்சி, எதிர்வரும் தேர்தலில் அவற்றில் சிலவற்றையேனும் தக்கவைத்துக் கொள்வது மிகவும் சிரமமானதே என்பதனையும் கருத்துக் கணிப்பு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதேவேளை கட்சித் தலைவர்களுக்கான தனிப்பட்ட ஆதரவு நிலைப்பாட்டில், ஆன்ரியா ஹோர்வத் ற்கு 30 சதவீதம் பேரும், பற்றிக் பிரவுனுக்கு 27 சதவீதம் பேரும், கத்தலின் வின்னுக்கு 12 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.