ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வானூர்தி தாக்குதலில் அப்பாவி சிறுவர்கள் கொல்லப்பட்டது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை ஆணையிட்டுள்ளது.
போராளிகள் வசமுள்ள ஏமனின் வடக்குப்பகுதியில் சௌதி தலைமையிலான கூட்டணி வியாழக்கிழமை நடத்திய வான் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களுள் பாடசாலை சிறுவர்கள் 29 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் பேருந்து ஒன்றில் சாடா பிராந்தியத்திலுள்ள தயான் சந்தை வழியாக பயணித்துக் கொண்டிருந்த போது அவர்களின் பேருந்து தாக்குதலுக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது.
சவுதி கூட்டுப்படையினர் நடத்திய இந்த வானூர்தி தாக்குதலில் 43 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 61பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹூதிகள் நடத்தும் அரசாங்கத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பத்து வயதுக்கும் குறைவானவர்கள் என்றும், பாடசாலைச் சிறுவர்கள் 29 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30பேர் வரையான சிறுவர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
இந்த நிலையிலேயே குறித்த தாக்குதல் தொடர்பில் சுதந்திரமான விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை ஆணையிட்டுள்ளது.