முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஐ நாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கைக்கான பரிந்துரைகள்! யாழில் விசேட கலந்துரையாடல்

935

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இந்த வருடம் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையில் உள்ளடங்க வேண்டிய சிபார்சுகளுக்கான பரிந்துரைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று யாழில் இடம்பெற்றது.

யாழ்.நாவலர் கலாசார மண்டபத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் நா.இன்பநாயகம் தலைமையில் முற்பகல்-10.30 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் தென்னிலங்கையைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான ருக்கி பெர்னாண்டோ, புஸ்ப குமார, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடகிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் ஆகியோருடன்,

சிறப்பு அதிதியாக யாழ்.பல்கலைக் கழக அரசறிவியல் துறைத் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கே.ரி.கணேசலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுத் தலைவர் ச.சஜீவன், வலி.வடக்கு மீள்குடியேற்றப் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் என்.குணபாலசிங்கம், செயலாளர் மா.நாகேந்திர சீலன், வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்த மக்கள் ஒன்றியத்தின் தலைவர் நடராசா ரட்ணராஜா,

யாழ்.மாவட்டக் கடற்தொழிலாளர் சம்மேளனத் தலைவர் வே.தவச்செல்வம், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், மீள்குடியேற்றம் சார்ந்த அமைப்புக்களின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு யாழ்.மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளையும் சிபார்சுகளாக முன்வைத்தனர்.

குறிப்பாக மக்கள் சொந்தநிலங்களில் மீள்குடியேற்றப்படாத காரணத்தால் அவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பாதிப்புக்கள், அரசியற் கைதிகள் விடுவிக்கப்படாமை, காணாமற் போனோர் பிரச்சினை, தமிழர் பகுதிகளில் புத்தர் சிலைகள் போன்ற மதச் சின்னங்கள் நிறுவப்படுதல், மீனவர் பிரச்சினை, பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன் போது பல சிபார்சுகள் முன்வைக்கப்பட்டன.

இது தொடர்பான கலந்துரையாடல் கடந்த ஜனவரி மாதம்-16 ஆம் திகதி தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற போது, பிராந்திய ரீதியான செயலமர்வுகளை நடாத்திப் பிராந்திய ரீதியில் தகவல்களைப் பெற்றுக் கொள்வதெனத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கமைவாக யாழ்.மாவட்டத்தில் இன்றைய தினம் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட மக்கள் பொதுவாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? அதற்கு மக்களிடமிருக்கும் ஆலோசனைகள், தரவுகள், சிபார்சுகள் எனவும் ஆலோசிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடல் கடந்த-03 ஆம் திகதி மட்டக்களப்பிலும், 4 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றிலும், அதேநாளில் மாத்தறை மாவட்டத்திலும், 6 ஆம் திகதியான நேற்று மன்னாரிலும், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திலும், காலியிலும், பதுளையிலும் ஒரேநாளில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறுகின்றது.

நாளை புதன்கிழமை திருகோணமலை, மற்றும் மலையகத்தின் ஹற்றன் ஆகிய பகுதிகளிலும், இறுதியாக எதிர்வரும்-10 ஆம் திகதி நீர்கொழும்பில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

குறித்த இடங்களில்பல்வேறு மக்கள் பிரதிதிகளிடமிருந்தும் பெறப்படும் தரவுகளையும் மையப்படுத்தி

சிவில் அமைப்புக்களுடைய உடன்பாட்டைப் பெற்றுக் கொண்டு இறுதியான கலந்துரையாடல் மூலம் கொழும்பில் நடாத்தப்படும் நிகழ்வொன்றில் வைத்து இறுதி அறிக்கை வெளியீடு செய்யப்படவுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபைக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடகிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கருத்துத் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை ஒவ்வோரு நாடுகளினதும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள் என அறிவதற்காக அந்தந்த அரசாங்கங்களிடமிருந்து பூகோள கால மீளாய்வு அறிக்கையைப் பெற்றுக் கொள்ளும்.

அத்துடன் சிவில் அமைப்புக்களிடமிருந்தும், ஐக்கியநாடுகள் சபையின் இணை அமைப்புக்களிருந்தும் நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பாக அறிக்கையைக் கோரும்.

இந்த இரண்டு அறிக்கைகளையும் ஒப்பீட்டுப் பார்த்து ஒவ்வொரு அரசுகளினதும் உண்மையான நிலைமையை ஆராய்ந்து அனைத்து நாடுகளிலும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கங்களுக்குச் சில சிபார்சுகளை மேற்கொள்ளும்.

கடந்த- 2012 ஆம் ஆண்டு எங்கள் நாட்டு அரசாங்கமொரு அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது.

சிவில் அமைப்புக்களும் சில காரணிகளை முன்வைத்து அறிக்கைகளை முன் வைத்திருந்தது. அந்த அறிக்கையில் 164 சிபார்சுகளை இலங்கை அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்திருந்தது.

அதில் இலங்கை அரசாங்கம் 64 முக்கியமான சிபார்சுகளை மாத்திரமே ஏற்றுக் கொண்டது. இந்த வருடம் ஏற்கனவே இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்ட சிபார்சுகளை நடைமுறைப்படுத்தியிருக்கிறதா? இல்லையா? என்பது தொடர்பாகவும்,

தற்போது இலங்கையிலுள்ள மனித உரிமைகளின் நிலையென்ன?, அதனை மேம்படுத்துவதற்கு எவ்வாறான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது போன்ற விடயங்களையும் உள்ளடக்கி இந்த வருடம் ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அரசாங்கமொரு அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

சில சிவில் அமைப்புக்கள் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தைத் தாம் கஸ்ரப்படுத்தத் தேவையில்லை என ஒதுங்கிக் கொண்டனர்.

ஆனால், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கமாகிய நாங்கள் வேறு பல முக்கியமான அமைப்புக்களையும் இணைத்துக் கொண்டு இந்த வருட அறிக்கையைத் தயாரிப்பதற்கு முனைந்துள்ளோம்.

இந்த முயற்சியை ஊக்குவிப்பதற்காகப் பல சட்டத்தரணிகள் எம்முடன் இணைந்துள்ளனர் என்றார்.

இதேவேளை, எதிர்வரும்-16 ஆம், 17 ஆம் திகதிகளில் கொழும்பு-06 இல் இடம்பெறவுள்ள இந்த வருடம் ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையில் உள்ளடங்க வேண்டிய சிபார்சுகளுக்கான பரிந்துரைகள் தொடர்பான முழுநாள் செயலமர்வில் வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்த மக்கள் ஒன்றியத்தின் தலைவர் நடராசா ரட்ணராஜா, யாழ்.மாவட்டக் கடற்தொழிலாளர் சம்மேளனத் தலைவர் வே.தவச்செல்வம் கலந்து கொள்வதற்காகத் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *