இலங்கை மீதான மனித உரிமை விடயங்கள், பொறுப்புக் கூறல், மீளிணக்கம் போன்ற விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையில் கனடா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் என்று வெளியுறவு அமைச்சர் கிறிஸ்ரியா ஃபிறீலண்ட் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையில் குரல் எழுப்பி வரும் நாடுகளுடன் கனடாவும் இணைந்து கொள்ளும் என்று நேற்று நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.
இலங்கையில் போர் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் கழிந்த பின்னரும் பொறுப்புக் கூறல், மீளிணக்கம் போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படவில்லையென சுட்டிக் காட்டிய பிறம்ரன் வடக்கு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரூபி சஹோட்டா, இது குறித்த கனடாவின் நிலைப்பாடு என்னவென்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஃபிறீலண்ட், பிரித்தானியா, ஜேர்மனி, வடக்கு மசிடோனியா, மொன்றநீக்றோ ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கை தொடர்பான விடயங்களை கவனித்துவரும் குழுவில் கனடாவும் இணைந்து கொள்ளவுள்ளதாக பதில் அளித்தார்.
கடந்த மார்ச்சில் நடைபெற்ற மனித உரிமைச் சபையின் 37-வது கூட்டத்தொடரிலும், ஏப்ரலில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் கூட்டத்திலும் இலங்கையின் பொறுப்புச் கூறல் நடவடிக்கைகள் துரிதமாக செயற்படுத்தப்படவேண்டும் என்று கனடா அழுத்தங்களைப் பிரயோகித்தமையை ஃபிறீலாண்ட் சுட்டிக்காட்டினார்.