கட்சி பேதங்களைக் கடந்து, தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளை ஒன்றிணைத்து, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் பேசி, இறுதி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 2 மாதங்களிலேயே தேர்தலொன்றைச் சந்தித்து வடக்கு கிழக்கு முழுவதும் 75 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது என்று கூறியுள்ளார்.
வடக்கு – கிழக்கில் தமிழரசுக்கட்சி முன்னிலை வகித்தாலும், ஒரு சில இடங்களைத் தவிர பல இடங்களில் ஏனையோருடன் இணையாது, ஆட்சியமைக்க முடியாத சூழல் உள்ளது எனவும், இதுவரை காலமும் ஏக பிரதிநிதிகள் எனத் தம்மை வரித்துக் கொண்ட தமிழரசுக் கட்சியினர், இந்தத் தேர்தலில் முன்னரை விட குறைந்தளவிலான வாக்குகளையே பெற்றுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றமொன்று வேண்டுமென வாக்களித்த மக்களை தமிழரசுக் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், கடந்த பல ஆண்டுகளாக கூட்டமைப்பில் இருக்கக் கூடிய கொள்கை முரண்பாடுகளைக் களைய வேண்டுமெனக் கோரி வந்த போதிலும், அத்தகைய கோரிக்கைகள் தமிழரசால் நிராகரிக்கப்பட்டே வந்த நிலையிலேயே, மாற்றுத் தலைமை ஏற்பட வேண்டுமென மக்களுக்கு எடுத்துக் கூறியிருந்ததாகவம் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆணையை மீறி கூட்டமைப்பு செயற்பட்டதால் சரியான பாதையில் செல்லுமாறும் வலியுறுத்தி வந்ததாகவும், ஆனாலும் அதனையும் தமிழரசுக் கட்சி கேட்காத நிலையில் தாங்கள் அதிலிருந்து வெளியேறி புதியதோர் கூட்டமைப்பை அமைத்து வெற்றி பெற்றிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தெற்கில் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஐபக்ஷவும் பாரிய வெற்றியை பெற்றிருக்கின்றார் எனவும், இதனால் கொழும்பில் பெரியளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கையில், சமஷ்டியைக் கோருகின்ற அனைவரும் ஒன்றுபட வேண்டுமென கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கேட்கின்றார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையிலையே தெற்கில் ஏற்படப் போகும் மாற்றமென்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கின்ற போது, கூட்டமைப்பினருக்கு மட்டும் இந்த மாற்றம் குறித்து தெரியாமல் இருந்ததா எனவும் கேள்வி எழுப்பியுள்ள அவர், அதற்கான திட்டங்கள் குறித்து ஏதாவது யோசித்து வைத்திருக்கின்றார்களா என்று கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இணைவு அல்லது ஒற்றுமை என்பதை வெறுமனே வாய்மொழி மூலமாக கூட்டமைப்பினர் கோருவதனை விடுத்து, அனைவரும் இணைந்து கலந்துரையாடி திட்டமிட்ட தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும், ஆனால் ஒவ்வொரு கட்சியும் தமது கட்சி சுயநலன்களுடன் தனித்து நின்று செயற்பட்டால் அரசியல் தீர்வை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்தவின் மீள் வருகையும் பலத்த பாதிப்புக்களை தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படுத்தக் கூடிய சூழல் நிலவுவதால் தமிழ்த் தரப்புக்கள் கட்சிசார் அடிப்படையில் சிந்திப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.