பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த கனேடியர்க்ள இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களே இந்த ஆண்டில் தமக்கு மிகவும் பாதிப்பினை ஏற்படுத்திய சம்பவங்கள் என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
அபு சயாப் எனப்படும் பிலிப்பீன்ஸ் தீவிரவாத அமைப்பினர், றொபேர்ட் ஹால் மற்றும் ஜோன் றிட்ஸ்டேல் ஆகிய இரண்டு கனேடியர்களையும் கடத்திச் சென்று பணயக் கைதிகளாக வைத்திருந்ததுடன், அவர்களின் விடுதலைக்காக பிணைப் பணத்தினையும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இருந்த போதிலும் அவர்களால் பிணைப் பணத்திற்காக விடுக்கப்பட்டிருந்த கால எல்லை முடிவுற்றதை அடுத்து அவர்கள் இருவரும் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
இவ்வாறான நிலையிலேயே அதுவே இந்த ஆண்டில் தமக்கு மிகவும் கவலையை ஏற்படுத்திய சம்பவங்கள் என்று கூறியுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, அப்போது அந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதில் தாம் கடும் சவால்களைச் சந்தித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அந்த விவகாரத்தில் கனடாவின் கொள்கையினை தக்கவைத்துக்கொள்ளும் பொறுப்பினை நிறைவேற்ற வேண்டிய அதேவேளை, பயணக் கைதிகளின் குடும்பத்தாருக்கும் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடும் தனக்கு முன் இருந்ததாக அவர் விபரித்துள்ளார்.
இவ்வாறு தீவிரவாதிகளால் பயணக் கைதிகளாக பிடிக்கப்படும் நபர்களின் விடுதலைக்காக ஒருபோதும் பிணைப் பணத்தினைச் செலுத்துவதில்லை என்ற கொள்கையினை கனடா கடைப்பிடித்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
தீவிரவாதிகள் பயணக் கைதிகளுக்கு துன்பம் விளைவித்து விடுவார்கள் என்ற அச்சத்தில், பயங்கரவாதிகளுக்கு பெருமளவு நிதியினை வழங்குவது பாதிப்பானது என்பதுடன், இவ்வாறு பணயக் கைதிகளை பிடித்து வைப்பதன் மூலம் மேலும் நிதியினை திரட்ட முடியும் என்ற தூண்டுகோளை தீவிரவாதிகளுக்கு வழங்கும் நடவடிக்கையாகவும் அது அமைந்துவிடும் எனவும் பிரதமர் விபரித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறு தீவிரவாதிகளுக்கு பணத்தினை வழங்க முற்படுவது, வெளிநாடுகளில் பணிபுரியும், மற்றும் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் இலட்சக்கணக்கான கனேடியர்களின் உயிர்களை ஆபத்தில் தள்ளிவிடக் கூடும் எனவும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ மேலும் தெரிவித்துள்ளார்.