சிறைவைக்கப்பட்டிருந்த கம்போடியாவின் எதிர்க்கட்சித் தலைவர் கெம் சொகா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டு வாசலில் இன்று பெருமளவான ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்.
கம்போடிய அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டதாக குற்றஞ்சாட்டி, அரசியல் கைதியாக கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட 65 வயதான கெம் சொகா, மருத்துவ காரணங்களுக்காக தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டு வீட்டுக்காவலில் உள்ளதாக அவருடைய மகள் கெம் மொனோவித்தியா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டு வாசலில் ஒன்றுகூடி காத்திருக்கும் ஆதரவாளர்களை சந்திக்கும் அனுமதி கெம் சொகாவிற்கு இல்லை என்று கெம் சொகாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கத்தினை நோக்கி சென்று கொண்டிருக்கும் அரசாங்கம் அரசியல் சிறைக்கைதிகளை விடுவிக்கக்கூடுமென தேசிய மீட்புக் கட்சியின் முன்னாள் தலைவர் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.
1998ஆம் ஆண்டிலிருந்து பிரதமராக பதவி வகித்துவரும் ஹன் சென்னின் வேண்டுகோளுக்கு இணங்கவே, கெம் சொகா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.