காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு மாதந்தோறும் குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
சிக்கிம் மாநிலத்தில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் மாநிலத்தில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் யுபிஐ (UBI) எனப்படும் மாதந்தோறும் அடிப்படை ஆதார ஊதியமாக அரசு ஒரு தொகையை அனைத்து மக்களுக்கும் வழங்குவதாக சிக்கிம் முதல்வர் சாம்லிங் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு இல்லாதது, முதியவர்கள், ஆதரவற்றோர் என பல காரணங்களுக்காக வழங்கப்படும் மாத ஊக்கத் தொகையை தவிர தனிநபர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த தொகை அடிப்படை ஊதியமாக அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
தனி மனிதர்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் அத்தியாவசிய செலவை கணிக்கிட்டு அதனை அரசே வங்கி கணக்கில் செலுத்துவது தான் இந்த திட்டம். மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இதுபோன்ற திட்டத்தை காங்கிரஸூம் அறிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பை அம்மாநில காங்கிரஸ் அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதன்படி நடைமுறைப்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி பத்திரங்களை வழங்கும் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி ஒரு புறம் அம்பானி, விஜய் மல்லையா, மொகுல் சோக்ஸி போன்றோரையும், மறுபுறம் ஏழை விவசாயிகளையு்ம உருவாக்கிக் கொண்டு இருக்கிறார். ஏழைகள் மீது இந்த அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை.
வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ஏழைகள் பயன் பெறும் வகையில் அவர்களுக்கு குறைந்தபட்ச வருமானத்தை அரசே வழங்கும். இந்த திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் பயனடைவர். வறுமை, ஏழ்மை நீங்கும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.