கனடாவின் வருமானவரித் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி தற்போது இடம்பெற்றுவரும் புதிய வகையிலான பணப் பறிப்பு தொடர்பில் வன்கூவர் காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காவல்துறை போல நடித்து இலக்கு வைக்கப்ட்டோரை கைது செய்யும் கொள்ளையர்கள், அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய பணம் என்று கூறி, குறித்த ஒரு இலக்கத்தில் பணத்தினை வைப்பிலட வைத்து இந்தப் பணப்பறிப்பினை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை 58 வயது பெண் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாகவும், வருமான வரித் திணைக்களத்தில் இருந்து அழைப்பதாக தெரிவித்தவர்கள், 6,000 டொலர்களை அவர் வரியாக செலுத்த வேண்டும் எனவும், அவர் மீது கைது ஆணை உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மீண்டும் குறித்த அந்தப் பெண்ணை தொலைபேசியில் தொடர்புகொண்ட மோசடிக் காரர்கள், தம்மை கனேடிய மத்திய காவல்துறை உத்தியோகத்தர்கள் என்று அறிமுகப்படுத்தியதுடன், அவரது வதிவிடம் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
சிறிது நேரத்தில் அவரது வீட்டின் கதவைத் தட்டிய இருவர், காவல்துறையினரின் சீருடையுடனும் ஆயுதங்களுடனும் காணப்பட்டதாகவும், குறித்த அந்தப் பெண்ணைக் கைது செய்த அவர்கள், வங்கி பணவைப்பு இயந்திரம் அமைந்துள்ள இடம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று, குறித்த ஒரு இலக்கத்திற்கு பணத்தினை வைப்பிலிட வைத்த பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் குறித்து மிகவும் விழிப்பாக இருக்குமாறு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ள காவல்துறையினர், கனேடிய வருமான வரித் திணைக்களத்தில் இருந்து அழைப்பதாக ஏதாவது தொலைபே அழைப்புகள் வந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.