கொன்சர்வேற்றிவ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால், 2021 ஜனவரி 1 ஆம் திகதிக்குள் புதிய குடியேற்ற விதிகளை நடைமுறைப்படுத்துவோம் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
பிரெக்ஸிற்றின் பின்னர் அறிமுகப்படுத்தப்படவுள்ள உடனடி நடவடிக்கைகளில் அவுஸ்திரேலிய நடைமுறையில் இருக்கும் புள்ளிகள் அமைப்பு முறை கொண்டுவரப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
மேலும் ஐரோப்பிய ஒன்றிய விதிகளிலிருந்து விடுபடுவதால் சிக்கலில் உள்ள இங்கிலாந்து தொழில்துறைகளுக்கு அரசு உதவி வழங்குவதை எளிதாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெஸ்ற்மின்ஸ்ரரில் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், டிசெம்பர் 12 தேர்தலில் தெளிவான வெற்றி தேவை. இல்லையெனில் பிரெக்ஸிற் நெருக்கடிநிலை நிலைத்திருக்கும் என்று எச்சரித்தார்.
இதேவேளை எஸ்.என்.பி தலைவர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் இன்று வெள்ளிக்கிழமை கூறுகையில்; மீண்டும் ஒரு தொங்கு பாராளுமன்றமே ஏற்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் கால அட்டவணை தவறானது என்றும் அடுத்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ளவுள்ள வர்த்தக ஒப்பந்தம் மீதான அவரது நம்பிக்கை நம்பமுடியாதது என்றும் தொழிற்கட்சி தெரிவித்துள்ளது.