திராவிட முன்னேற்றக் கழத்தில் தன்னை மீண்டும் சேர்த்துக்கொண்டால், ஸ்டாலினைத் தலைவராக ஏற்கத் தயார் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மூத்த மகனுமாக அழகிரி தெரிவித்துள்ளார்.
மறைந்த திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவர் கருணாநிதிக்கு நினைவெழுச்சி வணக்கம் செலுத்துவதற்காக பேரணி ஒன்றை நடாத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அவர், இன்று ஊடகவியலாரைச் சந்தித்த போது இவ்வாறு கூறியுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகம் பொதுக்குழு கூடி ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக்கொண்டது குறித்துக் கேட்டதற்கும் பதிலளித்துள்ள அவர், 1,500 பேர் மட்டுமே கட்சியை உருவாக்கிவிட முடியாது என்றும், உண்மையான கட்சித் தொண்டர்கள் தன்னிடம் உள்ளார்கள் எனவும் கூறியுள்ளார்.
அதேவேளை கட்சியில் மீண்டும் இணைய தனக்கோ தன் மகன் தயாநிதி அழகிரிக்கோ கட்சியில் எந்தப் பதவியும் தரத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தன்னுடைய தந்தை கருணாநிதியைத் தவிர யாரையும் தன் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று அழகிரி தெரிவித்திருந்த நிலையில், அவர் தற்போது இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.