தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு முறையாக அனுமதி பெறப்பட்டதா என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடாத்திய போது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.
இதனை அடுத்து இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மத்திய புலனாய்வுத் துறையினர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட விடயங்களை தொடர்பில் 15 வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் செல்வம், பஷீர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அரசுத் தரப்பை நோக்கி நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு முறையான அனுமதி பெற்றுதான் நடத்தப்பட்டதா என்றும், அந்த அனுமதியை அளித்தது யார் எனவும், அந்த அனுமதி வாய்மொழியாக அளிக்கப்பட்டதா அல்லது எழுத்து மூலமாக அளிக்கப்பட்டதா என்றும் நீதிபதிகள் இன்று கேள்வியெழுப்பியுள்ளனர்.
அத்துடன் மே மாதம் 21ஆம் தேதி ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துவிட்டு அடுத்த நாள் காலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்றும், அந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட விவகாரம் மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட்டதா என்றும் கேள்வியெழுப்பினர்.
இது தவிர, கலவரங்களுக்கு அடுத்த சில நாட்களில் சமூகவலைதளங்கள் முடக்கப்பட்டமை தொடர்பான ஆவணங்களையும் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதன் முதலில் பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதேவேளை இன்றைய இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க இயலாது என்று தெரிவித்ததுடன், காணொளி ஆதாரங்களை வைத்தே ஆட்கள் அடையாளம் காணப்படுகின்றனர் என்பதால் யாரும் தேவையில்லாமல் துன்புறுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணையை யூலை மாதம் 31ஆம் நாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.