நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 13 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 2 படகுகளில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், நெடுந்தீவு கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்ததுடன் அவர்களது 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர்.
சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் 13 பேரையும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்ததும் நீரியல் துறை அதிகாரிகளிடம் தமிழக மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் அவர்கள்மீது வழக்குப் பதிவுக்கு பின், அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கை கடற்படையினர் அட்டூழியம் கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்தது. தற்போது மீண்டும் அட்டூழியம் தொடர்ந்திருப்பதாக தமிழ்நாடு மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகள் குறித்து ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.