இலங்கை அரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாடுகளை, அரசாங்கத்தின் ஊடாக முடக்க தமிழ் தேசியக்கூட்டமைப்பு முற்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறிப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நசுக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் அரசாங்கத்தின் கைக்கூலிகளாக, கூட்டமைப்புச் செயற்படுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணனுக்கு எதிராக, உண்மைக்கு முரணாண வழக்கு ஒன்று கூட்டமைப்பால் தொடுக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வழக்கை யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் பதிவு செய்யாமல், கொழும்புக்குச் சென்று வழக்கைப் பதிவு செய்துள்ளார்கள் என்றால், அதற்கான காரணம், தாங்கள் விரும்பியத் தீர்ப்பு, கொழும்பில் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்பதற்காகவே ஆகுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை முடக்க முற்படுகின்ற இந்தத் தருணத்தில், அந்த வேலையை கூலிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கொண்டு முன்னெடுப்பதற்கான காய்நகர்த்தலை அரசாங்கம் செய்து வருகிறதெனவும் கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.